திருச்சி அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் சிலிண்டர் வெடித்தது- 3 குழந்தைகள் காயம்
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் சிகிச்சைக்காக வைக்கப் பட்டிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்று, அழுத்தம் தாங்காமல் எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், அங்கிருந்த கண்ணாடி உள்பட பல பொருட்கள் வெடித்து சிதறின. சிலிண்டர் வெடித்ததில் பயந்து போன மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர்.
இந்த விபத்தில் 3 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். வாயு கசிந்த போதே முன்னெச்சரிக்கையாக பெற்றோர் பலர் தங்களது குழந்தைகளுடன் அங்கிருந்து வெளியேறியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப் பட்டது.
சிலிண்டர் வெடித்த விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.