தமிழகத்தின் மீது கடைக்கண் பார்வை காட்டிய 'உலகம் சுற்று வாலிபன்'.... மோடி மீது ப.சி. தாக்கு
சென்னை: உலகம் சுற்றும் வாலிபன் என்று பட்டம் பெற்ற பிரதமர் மோடி ஒருவழியாக தமிழகத்தின் மீது கடைக்கண் பார்வை காட்டி வருகை தந்துவிட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக தாக்கியுள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிதம்பரம் பேசியதாவது:
14 மாதத்தில் 21 நாடுகளுக்கு சென்று உலகம் சுற்றும் வாலிபன் என்று பட்டம் பெற்ற பிரதமர் நரேந்திர மோடி வராது வந்த மாமணி போல தமிழகத்தின் மீது தனது கடைக்கண் பார்வையை காட்டி இருக்கிறார்.

தமிழகம் வந்ததற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது வறுமையை ஒழிக்க 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் ரத்து போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது என்னால் சொல்ல முடியும்.
பதவி ஏற்று 14 மாதத்தில் பெயர் சொல்லும் அளவுக்கு ஏதேனும் ஒரு திட்டத்தை பா.ஜ.க. அரசு செயல்படுத்தி இருக்கிறது என்று சொல்ல முடியுமா? 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் நிலைத்து இருக்க கூடிய, இரண்டு தலைமுறைகளுக்கு பயன்பட கூடிய திட்டங்கள் நிறைவேற்றி இருக்கிறதா? இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்திய தூய்மை திட்டம், திறன் மேம்பாடு திட்டம், காப்பீட்டு திட்டம் போன்றவற்றிக்கு புதிய பெயர் சூட்டி பா.ஜ.க. அரசு இன்றைக்கு செயல்படுத்தி வருகிறது.
ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் இருந்த திட்டத்தின் பெயர் இந்தியில் மட்டும் இன்று இடம் பெறுகிறது. இதுவும் கூட ஒரு வகையில் இந்தி திணிப்பு தான்.
இவ்வாறு சிதம்பரம் பேசினார்.












Click it and Unblock the Notifications