பாஜக மோடியும், காங். சித்தராமையாவும் தமிழருக்கு எதிராக கூட்டுச் சதி: பெ. மணியரசன் காட்டம்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது தொடர்பாக மோடியும் சித்தராமையாவும் கூட்டுச் சதி செய்து தமிழக மக்களை வஞ்சித்துள்ளனர் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.
காவிரி பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் மத்திய அரசு, கர்நாடகத்திற்கு ஆதரவான நிலை எடுத்துள்ளது.

இதுகுறித்து பெ.மணியரசன் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் இந்த முடிவால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய சட்டத்தையே வளைக்கும் முயற்சி இது. இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாகும் செயலாகவும் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளன.
மத்திய அரசின் இந்த முடிவு எதிர்ப்பார்த்ததுதான். கர்நாடக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான ஆனந்தகுமார், சதானந்த கௌவுடா கலந்து கொண்டு தமிழகத்திற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். அவர்கள் மோடியின் ஆலோசனை இல்லாமல் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க மாட்டார்கள். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது என்பது ஏற்கனவே தெரிந்த செய்திதான்.
கர்நாடக அரசும், மத்தியில் ஆளும் மோடி அரசும் கூட்டுச் சதி செய்து தமிழர்களை வஞ்சித்து வருகின்றன. இரண்டு அரசுகளுமே தமிழகத்தின் உரிமையை பறித்து வருகின்றன. 1991ல் இருந்தே காங்கிரஸ் மற்றும் பாஜக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதித்து நடக்கவில்லை.
இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கலை எதிர் கொண்டு போக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழர்களுக்கு எதிராக கர்நாடகம் நடந்து கொள்வதை கண்டித்து தமிழக மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று பெ. மணியரசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications