விஜி சந்திரசேகர் நடத்தும் உறவைத் தேடி... புதுயுகம் டிவியில் புதிய ரியாலிட்டி ஷோ...
சென்னை: தில்லுமுல்லு படத்தில் இயக்குநர் பாலச்சந்தரால் நடிகையாக அறிமுகமாகி, சின்னத்திரையில் அழகியாக வலம்வந்து இல்லத்தரசிகளை அழ வைத்த நடிகை விஜி சந்திரசேகர், இப்போது புதுயுகம் தொலைக்காட்சியில் 'உறவைத் தேடி' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
நம்முடைய தொலைந்து போன உறவுகள் பல ஆண்டுகள் கழித்து நம் கண்முன் வந்தால் எப்படியிருக்கும்? ஆனந்தத்தில், இன்ப அதிர்ச்சியில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுக்கும் இல்லையா? அப்படிப்பட்ட ஒரு இன்ப அதிர்ச்சியை பலருக்கும் தரப்போகிறதாம் புதுயுகம் தொலைக்காட்சி.
குடும்ப உறவுகளின் பிரச்சினைகளை அலசி ஆராய பல டிவி சேனல்களில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் புதுயுகம் டிவியில் புத்தம் புதிதாக முற்றிலும் மாறுபட்ட ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது, அதுதான் உறவைத் தேடி.
உறவைத் தேடி நிகழ்ச்சியின் மூலம் தொலைந்து போன உறவைத் தேடி கண்டுபிடித்து இணைக்கப் போவதாக கூறுகிறார் புதுயுகம் தொலைக்காட்சி சேனல் ஹெட் திரு இக்கி. காதல் திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு விலகி வாழ்பவர்கள், வேலைக்காக சொந்த பந்தங்களை விட்டு பிரிந்து வாழ்பவர்கள் போன்றவர்களை அவர்களின் சொந்தங்களோடு இணைத்து வைப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்கிறார் சேனல் ஹெட்.
உறவுகளை தேடும் சொந்தங்களுக்காக அவர்களைத் தேடி கண்டுபிடித்து பேசுகிறோம். பிரச்சினைகளால் பிரிந்து வாழ்பவர்களை ஒன்று சேர்த்து வைக்கிறோம். இரண்டு குடும்பத்தினரையும் சஸ்பென்ஸ் ஆக அழைத்து வந்து தொகுப்பாளர் முன்னிலையில் விசாரணை நடத்தி அவர்களை இணைக்கிறோம். அந்த தருணத்தில் அவர்களின் கண்களில் வழியும் ஆனந்த கண்ணீர்தான் இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றி என்கிறார் இக்கி.
உறவைத் தேடி நிகழ்ச்சி செப்டம்பர் 8ம் தேதியான இன்று தொடங்குகிறது. வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும்.
புதுயுகம் தொலைக்காட்சி புத்தம் புதிய நிகழ்ச்சிகளுடன் தன்னை மெருகேற்றிக் கொண்டுள்ளது என்கிறார் சிஇஒ ஷ்யாம். சீரியல்கள் அல்லாத ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ரசிக்கும் மக்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். அதுபோன்ற ரசிகர்களுக்காக புதுயுகம் தொலைக்காட்சியில் புத்தம் புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளதாகவும் கூறும் திரு ஷ்யாம், சினிமாவைத் தாண்டி சொந்த வாழ்க்கையிலும் நிறைய எண்டெர்டெயின்ட் இருக்கிறது, அதை அனைவரும் ரசிக்கும்படி தரப் போகிறோம் என்கிறார்.