"அம்மா ஸ்கூட்டர்" வேணுமா?.. "இலை"க்கு வாக்களியுங்கள்.. பச்சமால் அதிரடி பிரசாரம்
நாகர்கோவில்: முதல்வர் ஜெயலலிதா பாதி விலைக்கு ஸ்கூட்டர் வழங்கவுள்ளார். இந்த சலுகைகளைப் பெற இரட்டை இலைக்கு வாக்களித்து மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர பெண்கள் உதவ வேண்டும் என்று குளச்சல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.பச்சமால் பிரசாரம் செய்துள்ளார்.
குளச்சல் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக பச்சைமால் போட்டியிடுகிறார். முளகுமூட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், "முதல்வர் ஜெயலலிதா ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளார். தற்போது தேர்தல் அறிக்கையில் மாணவர் சமுதாயத்தின் நலன் கருதி கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றும், விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறி உள்ளார். மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வரும் ஒரே முதல்வர் ஜெயலலிதாதான்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் இந்த பகுதிக்கு என்ன வளர்ச்சித்திட்ட பணிகளை செயல்படுத்தி உள்ளார்? என்பது உங்களுக்கு தெரியும். இதை நீங்கள் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்"எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications