ஜல்லிக்கட்டு.. யானை கட்டி போரடித்த மண்ணில் யானைகளுடன் போராட்டம்.. பாகன்கள் அதிரடி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யானைகளுடன் போராட்டம் நடத்தப் போவதாக பாகன்கள் தெரிவித்துள்ளனர். திருச்சியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நாளை யானையுடன் பங்கேற்க உள்ளதாக யானை பாகன்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ள
கும்பகோணம்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யானை பாகன்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். திருச்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் நாளை யானையுடன் பங்கேற்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று பிரமாண்ட போராட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகன்களும் யானைகளுடன் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு யானை பாகன்கள் நலச்சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருச்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக நாளை யானையுடன் போராட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து திருச்சியில் நாளை நடைபெறும் போராட்டத்தில் பாகன்கள் நாளை யானையுடன் பங்கேற்க உள்ளனர். மாணவர்களின் போராட்டத்துக்கு ஒவ்வொரு நாளும் ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.