மீனவர் பிரச்சனை: மோடிக்கு எழுதிய கடிதத்தில் கடும் அதிருப்தியை தெரிவித்த எடப்பாடி!
சென்னை: இலங்கை சிறையில் உள்ள 53 மீனவர்களையும் 2 தினங்களில் கைது செய்யப்பட்டுள்ள 32 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 53 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 123 படகுகளை விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த இரண்டு நாட்களில் 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், பாக் நீரிணையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களும் சிறைபிடிக்கப்படுகின்றனர் என்றும் பாக் நீரிணையில் மீன்பிடிப்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயத் திருவிழா தொடங்க உள்ள நேரத்தில் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து தனது கவலையை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் பிரச்சனையில் இலங்கைக்கு போதிய நிர்பந்தம் அளிக்கப்படவில்லை என்று தனது அதிருப்தியை ஆழமாகவே பதிவு செய்துள்ள முதல்வர், மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்பது ஒன்றே வழி என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி எழுதும் 3வது கடிதம் இது. இந்த முறை எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் தனது அதிருப்தியை தெளிவாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications