பல்லாவரம் நகராட்சிப் பொறியாளர் இடமாற்றம்.. பதவியைப் பிடிக்க போட்டி. பல லட்சம் கைமாறியதாக பரபரப்பு!
சென்னை: சென்னை அருகே உள்ள பல்லாவரம் நகராட்சியின் பொறியாளராக இருந்து வந்த சீனிவாசன் என்பவர் சென்னைப் பெருநகர வளர்ச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து நகராட்சிப் பொறியாளர் பதவியைப் பிடிக்க 2 பேருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பதவியைப் பிடிக்க இருவரும் பல லட்சம் ரூபாயை லஞ்சமாக தந்துள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளத.
பல்லாவரம் நகராட்சிப் பொறியாளர் பதவியில் இருந்தவர் சீனிவசான். இவரை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலவலகத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதையடுத்து நகராட்சிப் பொறியாளர் பதவி காலியாகியுள்ளது.
இந்தப் பதவியைப் பிடிக்க தற்போது 2 பொறியாளர்களிடையே கடும் போட்டி மூண்டுள்ளதாம். இதில் ஒருவர் பதவியை தனக்கே வழங்கக் கோரி உரியவர்களிடம் ரூ. 20 லட்சம் பணம் கொடுத்துள்ளாராம். இன்னொருவரோ இந்தா பிடி ரூ. 35 லட்சம் என்று தூக்கிப் போட்டுள்ளாராம். இதனால் பரபரப்பு கூடியுள்ளது.
அதிக பணம் கொடுத்தவருக்கே பொறியாளர் பதவியைத் தர சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதை அறிந்த முதல் நபர் தான் கூடுதலாக தரவும் தயாராக இருப்பதாக பேரம் பேசியுள்ளாராம்.
கிட்டத்தட்ட ஏலம் நடத்தும் அளவுக்கு பொறியாளர் பதவி போயுள்ளது பல்லாவரம் நகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நகருக்கு வெகு அருகே உள்ள பல்லாவரம் பல்வேறு தொழில் நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் அடங்கிய பகுதியாகும். நல்ல வருமானம் தரும் பகுதியும் கூட. இதனால்தான் நகராட்சிப் பொறியாளர் பதவியைப் பிடிக்க பெரும் அடிதடி, ஏலம் என்று போய் விட்டதாக கூறுகிறார்கள்.