டெல்லி விசிட்டுப் பின் போயஸ் கார்டனுக்கு போகாத ஓபிஎஸ்- மன்னார்குடி 'கேங்' ஷாக்!
போயஸ் தோட்டத்துக்கு சென்று சசிகலாவை சந்திக்காமல் இருக்கிறார் முதல்வர் பன்னீர்செல்வம். டெல்லி பயணத்துக்கு பின்னர் இதுவரை முதல்வர் பன்னீர்செல்வம் போயஸ் தோட்டம் செல்லவில்லை.
சென்னை: டெல்லி பயணத்துக்குப் பின்னர் போயஸ் கார்டனுக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செல்லாதது சசிகலா உட்பட மன்னார்குடி கோஷ்டிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தமிழக நலன்சார்ந்த கோரிக்கைகள், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது, நாடாளுமன்ற வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மனுவையும் மோடியிடம் கொடுத்தார் பன்னீர்செல்வம்.
பின்னர் தமிழக நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இதன்பின்னர் டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் முற்றாக மாறிப் போயுள்ளதாக கூறப்படுகிறது.
விரும்பாத மத்திய அரசு
முதல்வராக இருந்தும் கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் ஏதுமில்லாத சசிகலாவை சந்தித்து வந்தார் ஓ.பன்னீர்செல்வம். இச்சந்திப்பை மத்திய பாஜக அரசு விரும்பவில்லை என டெல்லி பயணத்தில் சுட்டிக்காட்டப்பட்டதாம்.
போயஸுக்கு போகாத ஓபிஎஸ்
இதனை ஏற்றுதான் டெல்லியில் இருந்து திரும்பியது முதல் போயஸ் கார்டன் பக்கமே பன்னீர்செல்வம் எட்டிப் பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல் அமைச்சர்களும் 'அடுத்த முதல்வர்' சசிகலா என கூப்பாடு போடுவதும் குறைந்துபோயுள்ளது.
பாஜக ப்ளான்
தற்போதைய நிலையில் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து தம்முடைய கஸ்டடியில் வைத்துக் கொள்ள மத்திய அரசு நினைக்கிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை இந்த நிலையை தொடரவே நினைக்கிறது பாஜக.
சமாளிப்பது எப்படி?
தங்களது விருப்பத்துக்கு எதிரான எதுவும் தமிழகத்தில் நடந்துவிடக் கூடாது என்பதிலும் மத்திய அரசு உறுதியாக இருக்கிறதாம். அப்படி ஏதேனும் நடந்தாலும் அதை எப்படி சமாளிப்பது? என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களும் டெல்லியில் வைத்து முதல்வர் பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
அதிர்ச்சியில் மன்னார்குடி
இந்த கட்டளைப்படிதான் தற்போது ஓ. பன்னீர்செல்வம் அரசு செயல்பட்டு வருகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத சசிகலாவின் மன்னார்குடி கோஷ்டி கடும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளதாக கூறப்படுகிறது.