அதிமுகவில் பண்ருட்டி- 'பண்ருட்டியாரு'க்கு? சிதம்பரம்- ஸ்ரீதர் வாண்டையாருக்கு?
சென்னை: அதிமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியை மகனுக்காக பண்ருட்டி ராமச்சந்திரனும் சிதம்பரம் தொகுதியை மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையாரும் பெறுவதில் மும்முரம் காட்டி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியைப் பெறுவதில் அதிமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. நகரச் செயலர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலர் கந்தன், ஜெயலலிதா பேரவை முருகன் ஆகியோர் மல்லுக் கட்டுகின்றனர். இதில் ஒன்றிய செயலர் கந்தனுக்கு மாவட்ட செயலாளர் எம்.சி. சம்பத் பரிந்துரைத்து வருகிறாராம்.

அதே நேரத்தில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மகன் சம்பத்குமாருக்கு இத்தொகுதியை பெற்றுவிடுவதில் மிகவும் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பண்ருட்டி தொகுதியை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்டுப் பெறுவார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் வேல்முருகன் தரப்பைப் பொறுத்தவரை தொகுதி மறுசீரமைப்பின் போது பண்ருட்டி தொகுதியில் இருந்த பல கிராமங்கள் நெய்வேலி தொகுதிக்கு சென்றுவிட்டதால் அந்த தொகுதியைத்தான் அவர் கேட்பதாகவும் பண்ருட்டி அக்கட்சியின் லிஸ்ட்டிலேயே இல்லை எனவும் கூறப்படுகிறது.
சிதம்பரம் தொகுதியில் முன்னாள் நகரச்செயலாளர் தோப்பு சுந்தரின் மனைவியான நிர்மலா சுந்தருக்கு சீட் கிடைக்கலாம் என அதிமுகவினர் நம்புகின்றனர். அதேபோல் குமராட்சி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பாண்டியன், காட்டுமன்னார்கோவில் ஒன்றியச் செயலாளரும், மாவட்ட பாசறை செயலாளருமான கே.எஸ்.கே.பாலமுருகன் ஆகியோரும் முட்டி மோதுகின்றனர்.
என்னதான் முட்டி மோதினாலும் கடைசியில் இந்த தொகுதியை "மன்னார்குடி" லாபி மூலமாக மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார் கைப்பற்றுவார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications