தேமுதிகவில் இருந்து வெளியேறும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆதரவு நிர்வாகிகள்: முன்னாள் எம்.எல்.ஏ அவுட்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், தே.மு.தி.க. மேற்கு மாவட்ட தலைவருமான சின்னச்சாமி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க. கட்சி ஆரம்பிக்கப்பட்டது. கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது எம்.ஜி.ஆர். காலத்தில் அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் பல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தே.மு.தி.க.வில் இணைந்தனர்.
அந்த வரிசையில் பழனி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும் தே.மு.தி.க.வில் சேர்ந்தார். அவரது கட்சி செயல்பாடு கண்டு ஆச்சரியப்பட்ட விஜயகாந்த் அவருக்கு மேற்கு மாவட்ட தலைவர் பதவி வழங்கினார். இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியினால் சின்னச்சாமி தேமுதிகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
29 எம்.எல்.ஏக்கள்
தேமுதிக கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ஒரே ஒரு எம்.எல்.ஏவாக ஜெயித்து சட்டமன்றத்திற்கு சென்றார். இதனையடுத்து 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து 29 எம்.எல்.ஏக்களுடன் எதிர்கட்சித்தலைவராக உயர்ந்தார்.
மோதல் போக்கு
ஆனால் ஆரம்பத்தில் இருந்த கட்சியின் வேகம் நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளை சந்திக்காமல் இருப்பது, கட்சியின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் கோஷ்டி அரசியல், மூத்த அரசியல் கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் இருப்பது போன்றவற்றால் பலர் கட்சியில் இருந்து விலகினர்.
அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
கட்சி எம்.எல்.ஏக்கள் 7 பேர் அதிருப்தி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அவைத் தலைவர் பண்ட்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்தார்.
அவைத்தலைவர் பதவி
இது அந்த கட்சிக்கு பெரிய இழப்பாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கட்சியில் இனிமேல் அவைத் தலைவர் பதவியே இருக்காது என்று விஜயகாந்த் அறிவித்தார். அவரின் இந்த போக்கு கட்சியின் பல நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
விலகிய சின்னச்சாமி
இதனால் தமிழகம் முழுவதும் பலர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அதன் வரிசையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. தலைவர் சின்னச்சாமி தான் கட்சியில் இருந்து விலகுவதாக பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்திருந்தார்.
பண்ருட்டி ஆதரவாளர்
பண்ருட்டி ராமச் சந்திரன் ஆதரவாளராக இருந்ததால் இவர் கட்சியில் இருந்து விலகியதாக தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். இதேபோல் மாவட்டத்தின் பல நிர்வாகிகளும் கட்சியின் தலைமை மீது அதிருப்தி காரணமாக விலக உள்ளதாக கூறியுள்ளனர்.
காலியாகும் கூடாரம்
அதிருப்தி எம்.எல்ஏக்களைப் போல கட்சி நிர்வாகிகளும் கணிசமான அளவில் வெளியேறி வருவதால் தேமுதிகவில் குழப்பம் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications