பரமக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை
பரமக்குடி: பரமக்குடி அருகே நேற்று முன்தினம் இரவு காரில் சென்ற பாஜக நிர்வாகியை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றனர்.
சிவகங்கை மாவட்டம், கோலாந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர், காளையார்கோவில் ஒன்றிய பாஜக இளைஞரணித் தலைவராக இருந்தார். இவருக்கும், பரமக்குடி அருகே உள்ள புழுதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வி என்பவருக்கும் திருமணமாகி 4 மாத ஆண் குழந்தை உள்ளது.
உடுமலைப்பேட்டையில் வசித்து வந்த இவர், 6 மாதங்களுக்கு முன்பு பரமக்குடி மணிநகர் பகுதியில் தங்கி, கோழிக் கடை நடத்தி வந்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்காக மாலை அணிந்திருந்த ரமேஷ், திங்கள்கிழமை இரவு கோழிக் கடையை அடைத்துவிட்டு, புழுதிக்குளத்தில் உள்ள தனது மனைவி, குழந்தையைப் பார்க்க காரில் சென்றார்.
தென்பொதுவக்குடி காலனி அருகே கார் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவரது காரை வழிமறித்து, ரமேஷை விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் நிலைகுலைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி, பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரதேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்தை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அரசியல் பிண்ணனியா ? அல்லது வேறு காரணமா ? என்ற கோணத்தில் பரமக்குடி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.