துணை ராணுவப் படை என்ன செய்யும்?
துணை ராணுவப் படை வந்தால் என்ன செய்யும் என்பதுதான் கேள்வி.
Recommended Video
சென்னை: தூத்துக்குடிக்கு துணை ராணுவப் படை வர இருக்கிறது. துணை ராணுவப் படையினர் அப்படி என்னதான் செய்வார்கள்?
நமது ராணுவத்துக்கு துணையாக இருக்கக் கூடியவை 7 படைப் பிரிவுகள். அஸ்ஸாம் ரைபிள்ஸ் (ஏஆர்), எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்எப்) , மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிபிஐஎஸ்எப், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), இந்தோ- திபெத் எல்லை போலீஸ் (ஐடிபிபி), தேசிய கமாண்டோ படை (என்எஸ்ஜி) , சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) ஆகியவைதான் துணை ராணுவப் பிரிவுகள்.
7 துணை ராணுவப் படையிலும் மொத்தம் 10 லட்சம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். இந்த 7 படைப்பிரிவினரும் எல்லைகளில் ராணுவத்துக்கு உதவி செய்யும் படைப் பிரிவினர்.
எல்லை மாநிலங்களில்
குறிப்பாக ஆயுதக் கிளர்ச்சிகள் நடைபெறக் கூடிய அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை, ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப், சீனா- திபெத் எல்லைகளில் இதர படையினர் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர்.
தண்டகாருண்ய காடுகளில்..
எல்லை பகுதிகள் இல்லாமல் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணிகளிலும் பிஎஸ்எப், சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் வாழும் பகுதிகளில் இத்தகைய துணை ராணுவப் படையை பயன்படுத்தக் கூடாது என ஏற்கனவே கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
சர்வ அதிகாரங்களும்..
வடகிழக்கு மாநிலங்களிலும் ஜம்மு காஷ்மீரிலும் இருக்கும் மிக முக்கியமான அரசியல் ராணுவ பிரச்சனையே துணை ராணுவப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு ஆயுதப்படைச் சட்ட அதிகாரம் என்பதாகும். இந்த சட்டத்தின் கீழ் துணை ராணுவப் படையினர் ஒருவரை விசாரிக்க, கைது செய்ய, சுட்டுக் கொல்ல அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது.
போராட்டம்
இச்சட்டத்தை துணை ராணுவப் படையினர் வடகிழக்கில் முறைகேடாக பயன்படுத்தி பல நூறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால்தான் அஸ்ஸாம் ரைபிள்ஸ் தலைமையகம் முன்பாக மணிப்பூர் பெண்கள் அணி ஒன்று முழு நிர்வாண போராட்டம் நடத்தி, 'எங்களை வந்து பலாத்காரம் செய்யுங்கள்' என அறைகூவல் விடுத்து உலகையே அதிரச் செய்தது. இதனைத் தொடர்ந்துதான் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா போராட்ட களத்துக்கு வந்தார். துணை ராணுவப் படையினருக்கு வழங்கப்படும் இச்சிறப்பு அதிகார சட்டம் பெரும்பாலும் முறைகேடாக பயன்படுத்தப்படும் குறிப்பாக பலாத்காரம், படுகொலைகளில் அவர்களைப் பாதுகாப்பும் கேடயமாக இருக்கிறது. இதனால்தான் காஷ்மீரமும் இந்த சட்டத்துக்கு எதிராக போராடுகிறது,
கேள்வி கேட்க முடியாது
இச்சிறப்பு சட்டத்தை எதிர்த்து போராடுவதால்தான் காஷ்மீரத்து இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறது துணை ராணுவம். அவர்கள் கல்லெறிந்தார்கள் எனில் உடல்களை ஊடுருவி ஊனப்படுத்தக் கூடிய, பெல்லெட் குண்டுகளை பயன்படுத்தவும் துணை ராணுவம் தயங்குவதில்லை. சத்தீஸ்கர், ஒடிஷா மாநிலங்களில் பிஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎப் துணை ராணுவத்தினர் பழங்குடி மக்களை பிடித்து கொண்டு வந்து, இத்தனை மாவோயிஸ்டுகளை கைது செய்துவிட்டோம்- சரண்டர் அடைய செய்துவிட்டோம்- அல்லது என்கவுண்ட்டர் செய்துவிட்டோம் என கணக்கு காட்டுகிறார்கள். இதை கேள்வி கேட்பார் யாருமில்லை. இவை அல்லாமல் பொதுவாக தேடுதல், கைப்பற்றுதல், ஆயுத சட்டங்களின் கீழ் கைது செய்தல் ஆகியவற்றை துணை ராணுவப் படை மேற்கொள்ளும்.