செங்கல்லை எடுத்து தலைக்கு கீழ் வைத்து சரமாரி வெட்டு.. எஸ்.ஐ.யைக் கொன்ற கள்ளக்காதலி பரபர வாக்குமூலம்!
சிதம்பரம்: சப் இன்ஸ்பெக்டர் கணேசனுடன் நான் பல இடங்களுக்கும் போய் உல்லாசமாக இருந்துள்ளேன். அவருக்காக நான் எனது குழந்தையைக் கூட எனது கணவரிடமே விட்டு விட்டு பிரிந்து வந்து விட்டேன். அவருக்கு மனைவி போல வாழ்ந்து வந்தேன். அவரும் என்னை கல்யாணம் செய்வதாக கூறியிருந்தார். ஆனால் திடீரென இன்னொரு பெண்ணை மணந்ததால் ஆத்திரமடைந்தேன், கோபமடைந்தேன், அவரைக் கொலை செய்தேன் என்று சிதம்பரத்தில் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் என்பவரைக் கொலை செய்த வழக்கில் கைதான அவரது கள்ளக்காதலி வனிதா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை செய்து விட்டு தப்பி ஓட முயன்ற வனிதாவை பேருந்து நிலையத்தில் வைத்துப் போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
தான் கணேசனைக் கொலை செய்தது ஏன் என்பது குறித்து விரிவான வாக்குமூலம் அளித்துள்ளார் வனிதா. அதில் அவர் கூறியிருப்பதாவது:

கிள்ளையில் தொடங்கிய கள்ளக்காதல்
கிள்ளை போலீஸ் நிலையத்தில் கணேசன் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த போது ஒரு விவகாரம் தொடர்பாக கணேசனை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எனக்கும், அவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

அடிக்கடி உல்லாச பயணம்
நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் அவருடன் சென்று இருக்கிறேன். இந்த நிலையில் கிள்ளை போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் வீடு எடுத்து தங்கினார். நானும் அங்கு சென்று அவருடன் அடிக்கடி தங்கினேன்.

கணவர் கலைமணி
இதற்கிடையே எங்களுடைய கள்ளக்காதல் விவகாரம் என்னுடைய கணவர் கலைமணிக்கு தெரியவந்தது. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே அவரை பிரிந்து சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூரில் உள்ள எனது தாயார் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

புருஷன் பொண்டாட்டி போல
எனக்கு 7 வயதில் ஒரு குழந்தை உள்ளது. குழந்தையை எனது கணவரிடம் விட்டுவிட்டேன். கணேசனுடன் நான் கிட்டத்தட்ட கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தேன். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்திருந்தார். அதை நான் நம்பினேன்.

பேசித் தீர்க்கலாம் வா...
இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி அவர் எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது எனக்கு தெரியவந்தது. எனவே இதுபற்றி அவரிடம் பேசி சண்டை போட்டேன். அப்போது 22-ந்தேதி (நேற்று) சிதம்பரம் வருகிறேன். அங்கு நாம் பேசிக்கொள்ளலாம் என்று கூறினார்.

வெறியோடு வந்தேன்
அதன்படி நேற்று அவர் வந்தார். ஆனால் என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற வெறியோடு நான் இருந்தேன். எனவே அரிவாள் ஒன்றை தயார் நிலையில் பையில் எடுத்து வைத்துக்கொண்டு அங்கு சென்றேன்.

சாப்பாடு, மது
வீடு அருகே சென்றதும் அரிவாளை அருகில் உள்ள செங்கல் குவியல் அருகே மறைத்து வைத்தேன். பின்னர் அவருடன் சென்று பேசிக்கொண்டிருந்தேன். கணேசனின் உதவியாளர் அய்யப்பன் வந்திருந்தார். அவரிடம் சாப்பாடு மற்றும் மது வாங்கி வரும்படி கணேசன் சொல்லி அனுப்பினார்.

உல்லாசம்- களைப்பு - போதை
அவர் வெளியே சென்று சாப்பாடு, மது வாங்கி வந்தார். அந்த நேரத்தில் வெளியே சென்ற நான் மறைத்து வைத்திருந்த அரிவாளை வீட்டிற்குள் எடுத்து வந்தேன். பின்னர் இருவரும் சாப்பிட்டு விட்டு உல்லாசமாக இருந்தோம். அவர் அதிகமாக மது குடித்து இருந்தார். இந்த களைப்பில் அயர்ந்து தூங்கினார்.

செங்கல்லை கீழே வைத்து சரமாரி வெட்டு
இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று கருதிய நான் வெளியில் இருந்து ஒரு செங்கலை எடுத்து வந்தேன். அவரை வெட்டுவதற்கு வசதியாக அதை அவருக்கு கழுத்துக்கு கீழே வைத்தேன். பின்னர் அரிவாளால் கழுத்தை சரமாரியாக வெட்டினேன். இதில் அந்த இடத்திலேயே அவர் பிணமானார். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்ட நான் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றேன்.

சேலையை மாற்றி விட்டு
எனது சேலையில் ரத்தக் கறை படித்து இருந்தது. எனவே இருட்டான ஒரு பகுதிக்கு சென்று வேறு சேலையை மாற்றிக்கொண்டேன். அவரை வெட்டிய அரிவாளை அங்குள்ள குட்டையில் வீசினேன். பின்னர் மெயின்ரோட்டுக்கு வந்த நான் ஆட்டோ பிடித்து பஸ் நிலையத்துக்கு வந்தேன். அங்கு விருத்தாசலம் செல்லும் பஸ் நின்று கொண்டிருந்தது. அதில் ஏறினேன். விருத்தாசலத்தில் இறங்கியதும் எங்கு செல்வது என்று தெரியவில்லை. பஸ் நிலையத்தில் சேலம் பஸ் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதில் ஏறி அமர்ந்தேன். அப்போது போலீசார் என்னை கண்டுபிடித்து கைது செய்தனர் என்று கூறியுள்ளார் வனிதா.












Click it and Unblock the Notifications