கேரளாவில் தீவிரவாத பயிற்சி அளித்த பறவை பாட்ஷா- போலீஸ் அதிர்ச்சி தகவல்
நெல்லை: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பறவை பாதுஷா கேரளாவில் தீவிரவாத பயிற்சி அளித்தாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மூத்த தலைவர் அத்வானியை மதுரையில் கொல்ல முயற்சி, சேலம் ஆடிட்டர் ரமேஷ் வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் படுகொலைகள் மற்றும் பெங்களுரு குண்டு வெடிப்பு ஆகிய முக்கிய வழக்குகளில் தேடப்பட்டு வந்த பறவை பாதுஷாவை கடந்த 22ம் தேதி கேரள மாநிலம் புனலூரில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே அவர் கேரள மாநிலத்தில் அவர் எங்கெங்கு பதுங்கியிருந்தார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பறவை பாதுஷா கடந்த 7 மாதங்களுக்கு முன் கொல்லம் மாவட்டம் அஞ்சல் என்ற இடத்துக்கு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அப்பகுதியை சேர்ந்த ஒரு மத போதகர் மற்றும் ஆட்டோ டிரைவர்
உதவியுடன் சந்தை முக்கு பகுதியில் உள்ள ஒரு ரைஸ்மில்லில் ஒன்றரை மாதம் வேலை பார்த்துள்ளார். பின்னர் அப்பகுதியை சேர்ந்த மது என்பவருடன் சேர்ந்து கொத்தனார் வேலையும் பார்த்துள்ளார். இரண்டு மாதங்கள் மட்டும் வேலை பார்த்த அவர் அது போரடிக்கவே அதை உதறிவிட்டு மாடுகளை வாங்கி விற்கும் தொழிலில் இறங்கியிருக்கிறார். இதில் மாட்டு வியாபாரி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரது உதவியுடன் ஷண்ணபேட்டை என்ற இடத்தில் ஒரு மட்டன் கடையில் வேலை பார்த்து உள்ளார். அங்கு வைத்து அவரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கொல்லம் மாவட்ட தனிப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் நடத்திய விசாரணையில், கொல்லம், கோழிக்கோடு, மணப்புரம், கண்ணூர், காசர்கோடு உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்துள்ளார் இதற்கு 2 மத அமைப்புகள் அவருக்கு உதவி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அங்கு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார், உதவி செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.