பொள்ளாச்சி: மகன் இறந்த சோகம்… நினைவுநாளில் தற்கொலை செய்த பெற்றோர்
பொள்ளாச்சி: மகன் இறந்த துக்கம் தாங்காத பெற்றோர், மகனின் நினைவு தினத்தில் தங்கள் சொத்துகளை ஆசிரமத்துக்கு எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொள்ளாச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த தம்பதியரின் பெயர், சுப்ரமணியன்,42, வளர்மதி, 42 என்பதாகும். பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகர், கேவிஆர் நகரில் சொந்த வீடுகட்டி வசித்து வந்தனர். சுப்பிரமணியம் இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு சங்கர் (எ) நந்தன்,19 என்ற மகன் இருந்தார். அவர் பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார்.
மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட சங்கர், கடந்த 2014 ஆக.27ம் தேதி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதனால் சுப்பிரமணியமும், வளர்மதியும் சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில் சங்கரின் பிறந்த நட்சத்திரத்தின்படி, அவரது முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பெற்றோர் ஆனைமலை அருகே உள்ள காந்தி ஆசிரமத்துக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துள்ளனர்.
பிற்பகல் சுமார் 2 மணியளவில் வீடு திரும்பிய தம்பதியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். நீண்ட நேரத்துக்கு பிறகே இந்த செய்தி அக்கம், பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த பொள்ளாச்சி மேற்கு காவல்நிலைய போலீஸார், வீட்டில் சுப்பிரமணியம் - வளர்மதி தம்பதி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், மகன் இறந்த துக்கம் தாளாமல் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, தங்களுக்கு சொந்தமாக குமரன் நகரில் உள்ள வீட்டை ஆனைமலை காந்தி ஆசிரமத்துக்கு ஒப்படைப்பதாக எழுதி வைத்துள்ளனர். இதனை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மகன் இறந்த துக்கம் தாங்காமல் அவனது நினைவு நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.