திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் நரசிம்மர் சன்னதி கும்பாபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் உள்ள நரசிம்மர் சாமி சன்னதியில் இன்று கோலகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

ஆலயத்தில் உள்ள யோகநரசிம்மர், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகள் மற்றும் அதன் விமானங்கள், பின்கோபுரவாசல் விமானம், பாண்டிகோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் பழமை மாறாமல் தொல்லியல் துறை வல்லுநர்களின் ஆலோசனைப்படி ரூ.95 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றன.
முதல் முறையாக நரசிம்ம சாமிக்கு சொர்ணபந்தனமும், கஜேந்திர வரதராஜ சாமிக்கு ரஜதபந்தனமும் பொருத்தப்பட்டுள்ளது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. இன்று காலை 9 மணி முதல் 10.25 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது பழமொழி. இன்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் திருவல்லிக்கேணிக்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு குங்குமம், கற்கண்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications