ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி நடக்கும் பஸ் ஸ்டிரைக் - நெல்லையில் பயணிகள் அவதி!
நெல்லை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய கோரி நெல்லை மாவட்டத்தில் இன்று தனியார் பஸ்கள் ஸ்டிரைக் தொடங்கியது. இதனால் தனியார் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. இதனால் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப நினைத்தோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதுநாள் முதல் அதிமுகவை சேர்ந்த பலர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று தனியார் பஸ்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் செல்லையா கூறுகையில், தனியார் பஸ் உரி்மையாளர்கள் சங்கங்களின் மாநில சம்மேளன அறிவிப்பின்படி ஜெயலலிதாவை விடுதலை செய்ய கோரி நெல்லை மாவட்டத்தில் இன்று தனியார் பஸ்கள் இயக்கப்படாது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இது தொடர்பாக நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தசரா பண்டிகை முடிந்து இன்று பலர் சொந்த ஊர்களுக்கும், தாங்கள் பணி செய்யும் வெளியூர்களுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர். மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்க வர்த்தக மையங்களுக்கு இன்று சென்று வருவார்கள். தனியார் பஸ்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் திணறி போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications