பொதிகை ரயிலில் பெயர் மாற்றத்தால் பெரும் குழப்பத்தில் பயணிகள்
நெல்லை: சென்னையிலிருந்து நெல்லைக்கு இயக்கப்பட்டு வரும் நெல்லை பொதிகை விரைவு ரயிலில் பெயர் பலகை குழப்பத்தால் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.
நெல்லையிலிருந்து தினமும் சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலிலும், செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு சென்ற பின்னர் மறுநாள் பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டைக்கு புறப்படும். இது போல் பொதிகை எக்ஸ்பிரஸ் சென்னைக்கு சென்றதும் மறுநாள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலாக மாறி வரும்.
இந்த இரு ரயில்களிலும் பெட்டிகளில் வைக்கப்படும் பெயர் பலகையில் ஒரு பகுதியில் நெல்லை-சென்னை என்றும், மறுபகுதியில் செங்கோட்டை-சென்னை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இரு மார்க்கத்திலும் ரயிலை மாற்றி இயக்கப்படும் போது பயன்படுத்த எதுவாக இப்படி பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால் அவசரத்தில் ரயிலை பிடிக்க வரும் பயணிகள் நெல்லை எக்ஸ்பிரசில் ஏறுவதற்கு பதிலாக செங்கோட்டை எக்ஸ்பிரசிலும், செங்கோட்டை செல்லும் பயணிகள் நெல்லை எக்ஸ்பிரசிலும் மாறி ஏறி விடுகின்றனர்.
பெரும்பாலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்பவர்கள் பெயர் குழப்பத்தால் அதிகம் பாதிப்பு உள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறிதது ரயில்வே நிர்வாகத்துக்கு பலமுறை பயணிகள் புகார் தெரிவித்தும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை என்று பயணிகள் குமுறுகின்றனர்.
ரயில்வே நிர்வாகம் உடனே விரைந்து இந்த நடவடிக்கையை துரிதபடுத்தி பெயர் பலகை குழப்பத்தை முடித்து வைக்க வேண்டும் என ரயில்வே பயணிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.