லேட்டாக வரும் புறநகர் மின்சார ரயில்கள் – ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் போராட்டம்!
சென்னை: செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையிலான புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதைக் கண்டித்து இன்று தாம்பரம் அருகே ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்தப் போராட்டம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மணி நேர அளவுக்கு ரயில்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே செங்கல்பட்டு, சென்னை கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் ரயில்கள் இயங்க முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்பட்டது.
மின்சார விரைவு ரயில்கள்:
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில், விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் பயணிக்கும் மக்கள்:
வேலைக்கு செல்வோரும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்வோரும் விரைவு மின்சார ரயில்களில் பெரும்பாலும் பயணம் செய்து வருகிறார்கள்.
நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள்:
இன்று காலையும் வழக்கம் போல ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள் காத்திருந்தனர். காலை 9.15 மணிக்கு வர வேண்டிய விரைவு ரயில் வரவில்லை. ஆனால் அது எப்போது வரும் என்ற அறிவிப்பும் இடம் பெறவில்லை.
சரிவர தகவல் இல்லை:
ஏமாற்றம் அடைந்த பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் சரிவர தகவல் தெரிவிக்கவில்லை.
கோபமடைந்த பயணிகள்:
இதனால் கோபமடைந்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் அவ்வழியே சென்ற மின்சார ரயிலை புறப்பட விடாமல் தடுத்து போராட்டத்தில் குதித்தனர்.
பயணிகள் பெரும் அவதி:
இதனால் அதன் பின்னால் வந்த ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் போக்குவரத்து இரு மார்க்கத்திலும் பாதிக்கப்பட்டது. இதனால் ரயில்களில் பயணித்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
அதிகாரிகள் பேச்சு வார்த்தை:
இதையடுத்து போராட்டம் நடத்திய பயணிகளிடம் ரயில்வே அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதையடுத்து போராட்டம் விலக்கி்க் கொள்ளப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு:
இந்தப் போராட்டம் காரணமாக ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை, செங்கல்பட்டு மார்க்கத்திலும் ரயில் போக்குவரத்து பெரும் பாதிப்பை அடைந்தது.