ஆபரேசன் செய்யும் போது அரெட்ஸ் ஆன ஹார்ட்... போராடி காப்பாற்றிய அரசு டாக்டர்கள்
சென்னை: பைபாஸ் ஆபரேசன் செய்யும் நேரத்தில் இதயத்துடிப்பு நின்று போனால் எப்படி இருக்கும்? அப்படி மாரடைப்பால் நின்று விட்ட இதய துடிப்பை, ஒரு மணி நேரம் போராடி துடிக்க வைத்துள்ளனர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள்.
50 வயதான நோயாளி ஒருவர், நெஞ்சுவலி சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய ரத்த நாளத்தில் அடைப்பு நோய் கண்டறியப்பட்டது.

அறுவை சிகிச்சை நாளில், சிகிச்சை தொடங்கும் முன்பே, நோயாளியின் இதயத்துடிப்பு நின்று விட்டது. ஆனாலும் மயக்கவியல் மருத்துவர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு மணி நேரத்திற்குமேல் போராடி நோயாளியின் இதயத்தை துடிக்கவைத்தனர்.அதன்பின் பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
மருத்துவர்களும், செவிலியர்களும் அளித்த தீவிர சிகிச்சையால் நோயாளி தேறி, இதய நோய் குணமாகி நலமடைந்தார். மருத்துவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தனியார் மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சை அளிக்க பல லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் அரசு மருத்துவமனையில்
நோயாளியின் அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட்டது.
இதற்கு தேவையான உபகரணங்களும் வசதிகளும், மருத்துவமனையின் முதல்வர் மற்றும் துறைத்தலைவரால் அளிக்கப்பட்டன.
இதயத்தின் முக்கிய அறையான இடது வென்ட்ரிகிளுக்கு தேவையான ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டால் திடீரென இதயத்துடிப்பு நின்று உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
ஆஞ்சியோ கிராம் சோதனையில் 5.7 சதவீதம் இந்த நோய் கண்டறியப்படும். இந்த நோய்க்கு முக்கிய சிகிச்சை பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சையால் இந்த நோய் குணமாவதுடன் திடீர் மரண அபாயமும் தவிர்க்கப்படும்.
மருத்துவர்களும், செவிலியர்களும் மற்ற பணியாளர்களும் ஒருமித்து தீவிர சிகிச்சை அளித்ததால் வெகு நேரம் இதயத்துடிப்பு இல்லாதிருந்த நோயாளி உயிருடன் மீட்கப்பட்டார். அதற்கான வசதிகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போதுமான அளவில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications