சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
சென்னை: பருவமழை பொய்த்துப்போனதால் தலைநகர் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. லாரிகள் மூலம் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
கடந்த ஆண்டு பருவமழை பொய்ததால் தமிழக அணைகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி உள்ளிட்ட 4 ஏரிகளில் தண்ணீர் இருப்பு 15 சதவீதத்திற்கும் கீழே சென்று விட்டது.

லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை
சென்னையில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், தற்போது கோடை காலம் துவங்கி விட்டது. வீட்டு அடிபம்புகளில் தண்ணீர் விநியோகம் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டு விட்டது. தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையை தடுக்க 700 தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வடசென்னை டூ தென் சென்னை
அம்பத்தூர் ஆவடி வடசென்னை தொடங்கி தென் சென்னை பெசன்ட் நகர், திருவான்மியூர்வரை தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்குகின்றனர்.

மருத்துவமனைகளில் தட்டுப்பாடு
சென்னையில் உள்ள மிகப்பெரிய அரசு பொது மருத்துவமனையான ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தண்ணீர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டது. இரு தினங்களாக தண்ணீர் வராத காரணத்தால் நோயாளிகள் குடிக்கவும், குளிக்கவும், கழிவறைகளுக்கு செல்லவும் அதிகம் அவதிக்கு ஆளாகினர்.

லாரிகள் வரவில்லை
மருத்துவமனைக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் லாரிகள் இரண்டு நாட்கள் வரவில்லை என்பதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து நோயாளிகள் காசு கொடுத்து வெளியில் இருந்து கேன் தண்ணீர் வாங்கி வந்து உபயோகிப்பதாக தெரிவித்தனர். இதனிடையே லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு மருத்துவமனைகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications