மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.. அதையும் தாண்டி அழகானது!
குளித்தலை: மாறி வரும் இயந்திர உலகில் மறந்துபோன எல்லையில்லா அன்பும், பிரதிபலன் பாராத பாசமும் மனிதர்களைவிட விலங்குகள், பறவைகளிடத்திலே வஞ்சமின்றி காணப்படுகின்றது. அதற்கு ஒரு உதாரணம் தோகைமலையில் நடந்துள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ளது தோகைமலை. பல வருடங்களாக மயில்கள் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து செல்லும், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு செல்லும் இரை தேடி செல்லும் இந்த மயில்கள் அங்கேயே சுற்றித்திரிந்து விட்டு பின்பு தன் இனத்துடனேயே சென்றுவிடும்.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி ஒரு ஆண் மயிலும், பெண் மயிலும் குளித்தலை மணப்பாறை பிரதான சாலையை கடக்க முயன்றன. அப்போது பைக்கில் வந்த ஒரு நபர் தெரியாமல் பெண் மயில் மீது மோதிவிட்டார். இதில் மயிலுக்கு காலில் பலமாக அடிபட்டு, அங்கேயே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. ஆனால் இது தெரியாத ஆண் மயிலோ சாலையை கடந்து சென்று அந்தப்பக்கம் நின்று கொண்டு, பெண் தேடி தேடி அலைந்தது.
ஆண் மயிலின் இந்த பரிதவிப்பு அங்கிருந்த பொதுமக்களை வெகுவாக பாதித்தது. ஆண் மயிலின் தவிப்பினை சிலர் கண்கலங்கி பார்த்து கொண்டே சென்றனர். ஆனால் ஆண் மயிலோ, பெண் மயிலை தேடுவதை விடவே இல்லை. வழக்கமாக செல்லும் இடங்களிலும், அந்த ஊரின் பல பகுதிகளிலும் சுற்றி சுற்றி வந்தது. மரங்களிலும், மின்கம்பங்களிலும் ஏறி நின்று கண்களை விட்டு துழாவி துழாவி பார்த்தது. பெண் மயில் கிடைக்கவே இல்லை. பெண் மயிலை தேடி அலைந்த ஆண் மயிலுக்கு குடியிருப்பு மக்கள் இரை வைத்தும் அதை சாப்பிடவில்லை.
நேற்று முன்தினம் கருப்பகோவில் அருகே உள்ள மின்கம்பத்தின் மேலே அமர்ந்து பெண் மயிலை தேடி பார்த்துவிட்டு, அடுத்த இடத்திற்கு செல்ல ஆண் மயில் பறந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக, மின்சாரம் தாக்கி கீழே விழுந்து மயில் இறந்தது. இதையடுத்து தகவல் அளிக்கப்பட்டதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் கடவூர் வனப்பகுதியில் ஆண் மயிலை புதைத்தனர்.
மனித இனத்தில் கற்பிக்கப்பட்டுள்ள காதலே வேறு தினுசாகி போய் கொண்டிருக்கிறது. ஏன்.. இன்றைய சூழலில் காதலர் தினமே வணிகமயமாகி விட்டது. மனிதர்கள் மட்டுமே உணர்வுடையவர்கள், அவர்கள் மட்டுமே பூமியில் வாழ தகுதி உடையவர்கள் என்பதை சுக்குநூறாக உடைத்து மாற்றியமைக்க கூடிய வல்லமை எண்ணற்ற உயிரினங்களிடம் ஆதி காலம் முதலே பொதிந்து உள்ளது. உலகில் அழிவில்லாதது நிரந்தரமானதும் உண்மையான அன்பும், தூய்மையான காதலும்தான் என்பதை மனித குலத்துக்கு சொல்லிவிட்டு போயுள்ளது அந்த ஆண் மயில். மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்லதான்... அதையும் தாண்டி!