வீடுகளில் வடியாமல் தேங்கிய வெள்ளம்- சென்னையில் இன்னும் அகதிகளாய் மக்கள்!
சென்னை: சென்னையில் வீடுகளில் இன்னும் வெள்ளம் வடியாத காரணத்தினால் 14 முகாம்களில் 2900 பேர் அகதிகளாக தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் அளவுக்கு அதிகமாக பெய்துள்ளது.

இதனால் அனைத்து அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியே வருகின்றன.
வெள்ளத்தில் மிதந்த பகுதிகள்:
டிசம்பர் 1, 2 ஆம் தேதிகளில் பெய்த பெருமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சொந்த ஊரில் அகதிகளாக:
ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு படையினர் போலீசார் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
வெள்ள நிவாரணப் பணிகள்:
தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் மற்றும் சுகாதாரப்பணிகளில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.
போர்க்கால நடவடிக்கை:
சென்னையில் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத்துறையும், பொது சுகாதாரத்துறையும் இணைந்து அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குப்பை கழிவுகளை அகற்றுதல், பிளீச்சிங் பவுடர் தூவுதல், வீடுகள் தோறும் அரை கிலோ பிளீச்சிங் பவுடர் வழங்குதல், புகை அடிப்பான் மூலம் புகை அடித்தல், 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற அனைத்து பணிகளையும் மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.
நிவாரண முகாம்களில் அடைக்கலம்:
இதற்கிடையே சென்னையின் சில இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியாமல் தேங்கி கிடப்பதாலும், வெள்ளத்தில் வீடு இழந்தவர்களும் தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்கி இருக்கிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் தங்கவைப்பு:
கோட்டூர்புரம் பகுதி மக்கள் கிண்டி காந்தி மண்டபம், ராஜாஜி மண்டபம் ஆகிய முகாம்களிலும், சைதாப்பேட்டை ஆற்றுமா நகர், ஜோதியம்மாள் நகர் பகுதி மக்கள் மாடல் ஸ்கூல் மற்றும் சின்னமலை அரசுப் பள்ளி முகாமிலும், ஆசிரியர் பயிற்சி கல்லூரி முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வீடு திரும்ப முடியாமல் அவதி:
குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும், வீடுகள் இடிந்து சேதம் அடைந்ததாலும் இவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்படுகிறார்கள். இவர்களுக்கு 3 வேளையும் உணவு, குடிநீர், மருத்துவம் போன்ற வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்து தரப்பட்டுள்ளன.
மருத்துவ முகாம்கள்:
இதுதவிர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 6,359 மருத்துவ முகாம்கள், 1,741 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 8,100 முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 13 லட்சத்து 52 ஆயிரத்து 245 பேர் பயன்பெற்றதாக மாநகராட்சி செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications