களைகட்டிய ஆடி அமாவாசை - “தென்னகத்து காசி” ராமேஸ்வரத்தில் திரண்டு திதி கொடுக்கும் மக்கள்
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்னகத்து காசி என்றழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் மக்கள் திரளாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.
ராமநாதசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். காசிக்கு நிகராக விளங்கும் இங்கு வெளி மாநில மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம். இதன் காரணமாக மாதந்தோறும் வரும் அமாவாசை மற்றும் முக்கிய நாட்களில் திரளான பக்தர்கள் இங்கு கூடுவார்கள். அதிலும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. அதன்படி நேற்று முதலே ராமேஸ்வரத்துக்கு அதிகளவில் ரெயில், பஸ்கள் மூலம் குவிய தொடங்கினர்.
ஆடி அமாவாசையான இன்று பக்தர்கள் அதிகாலை முதலே அக்னிதீர்த்தக் கடற்கரையில் குவிந்தனர். முன்னதாக இன்று காலை 6 மணியளவில் ராமர், பர்வதவர்தினி அம்பாள் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். பின்னர் தீர்த்தவாரி நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் ராமநாத சுவாமி கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் உள்ள தீர்த்தங்களில் நீராட பொதுமக்கள் நீண்ட காத்திருந்ததை பார்க்க முடிந்தது. ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
கோவில் கடற்கரை பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ்களும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. பொது மக்களின் வசதிக்காக மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு கூடுதலாக அரசு பஸ்களும் இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications