வெயிலையும் பொருட்படுத்தாமல் 'அம்மா'வை காணும் ஆசையில் சேலத்தில் குவிந்த மக்கள்
சேலம்: சேலம் மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் இருந்த ஏசி பெட்டிகள் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. என்ன தான் வெயில் அடித்தாலும் ஜெயலலிதாவை பார்க்கும் ஆசையில் மக்கள் கூட்டத்திற்கு வருகிறார்கள்.
முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பகல் வேளையில் சுட்டெரிக்கும் வெயிலில் பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகிறார். அவரது கூட்டங்களுக்கு வரும் மக்களுக்கு தொப்பிகள் அளிக்கப்பட்டாலும் அவர்கள் வெயிலை தாங்க முடியாமல் திணறுகிறார்கள்.
இந்நிலையில் ஜெயலலிதா சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடியில் புதன்கிழமை பிரச்சாரம் செய்தார்.

வேட்பாளர்கள்
ஜெயலலிதா சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் போட்டியிடும் 46 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் கேரள மாநில சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். வேட்பாளர்கள் மேடைக்கு அருகே நிழலான இடத்தில் வரிசையாக அமர வைக்கப்பட்டனர்.

பச்சை தொப்பி
கூட்டத்திற்கு வந்திருந்த மக்களுக்கு பச்சை தொப்பி அளிக்கப்பட்டது. தொப்பியை அணிந்தபோதிலும் மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அல்லாடினர். இந்நிலையில் 2 பேர் வெயிலை தாங்க முடியாமல் பலியாகினர்.

அமோக ஆதரவு
என்ன தான் வெயில் ருத்ரதாண்டவம் ஆடினாலும் ஜெயலலிதாவை பார்க்கும் ஆசையில் கூட்டம் நடக்கும் இடத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் ஜெயலலிதாவை பார்த்ததும் வெயிலை மறந்து உற்சாக கரகோஷம் எழுப்பினர்.

ஏ.சி.
மக்கள் எல்லாம் வெயிலில் வாட ஜெயலலிதா மட்டும் பல ஏ.சி. பெட்டிகளில் இருந்து குளு குளு என காற்று வரும் இடத்தில் அமர்ந்து பேசினார். அவர் மட்டும் ஏசியில் அமர்ந்து உரையாற்றுவதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications