உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக் கூட்டணி தொடரும்: வைகோ
சென்னை: வரும் உள்ளாட்சித் தேர்தலை மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்தே சந்திக்கும் என மதிமுக பொதுச் செயலாளரும், அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக, தேமுதிக, தமாகா, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டன. போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் இந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் கடும் தோல்வியை சந்தித்தன.
கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட் இழந்தார். இந்த கூட்டணியில் திருமாவளவன் உட்பட ஒரு சில வேட்பாளர்கள் தங்களது சொந்த செல்வாக்கில் டெபாசிட் பெற்றனர். மதிமுக போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் டெபாசிட் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல் தமாகா போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழந்தது.
இதையடுத்து மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா, தமிழர் முன்னேற்றப் படை என அடுத்தடுத்து கட்சிகள் விலகி வருகின்றன. இந்நிலையில், தற்போதைய அரசியல் நிலவரம், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை குறித்து மதிமுக தலைமையகமான தாயகத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், உள்ளாட்சி தேர்தலை மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்தே சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு கட்சிகள் அடங்கியதே மக்கள் நலக் கூட்டணி. மக்கள் நலக் கூட்டணியில் நிரந்தரமாக இருந்து தமிழக வாழ்வாதாரத்தை காப்போம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு வைகோ கூறினார்.