வீடு திரும்பிய பேரறிவாளன்.. உணர்ச்சிப் பெருக்குடன் வரவேற்ற மக்கள் கூட்டம்
ஜோலார்பேட்டை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் இன்று பரோலில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
ஜோலார்ப்பேட்டையில் பேரறிவாளன் வீடு உள்ளது. வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் ஜோலார்ப்பேட்டை அழைத்து வரப்பட்டார்.
அவரை வரவேற்க அவரது வீட்டுப் பகுதியில் பெரும் திரளாக மக்கள் காத்திருந்தனர். 26 வருடங்களுக்குப் பின்னர் வரும் பேரறிவாளனின் வருகை அப்பகுதியை உணர்ச்சிப்பூர்வமாக மாற்றியிருந்தது.
பேரறிவாளனின் பெற்றோர் ஞானசேகரன் - அற்புதம் அம்மாள், சகோதரி அன்புமணி உள்ளிட்டோர் நெகிழ்ச்சியுடன் காத்திருந்து தங்களது பிள்ளையை கண்ணீருடன் வரவேற்றனர். மக்களும் உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டனர். பேரறிவாளன் வருகையைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.