ஜெ.வின் பொய்க்கும், பித்தலாட்டத்திற்கும் மக்கள் இனியும் ஏமாறமாட்டார்கள்: கருணாநிதி
சென்னை: தமிழ்நாட்டு மக்கள் திறமைசாலிகள். எனவே, ஜெயலலிதாவின் பொய்க்கும், பித்தலாட்டத்திற்கும் இனியும் அவர்கள் ஏமாறமாட்டார்கள் என தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
லோக்சபா தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில் தமிழக கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரங்களில் திமுக குறித்தான விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி கேள்வி-பதில் வடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-

ஜெ.வின் திண்டுக்கல் பிரச்சாரம்....
கேள்வி:-‘‘இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக்கூட தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்ற கருணாநிதிக்கு துணிவில்லை, இந்த பயத்துக்கு காரணம் தன்னலம்'' என்று திண்டுக்கல்லில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பதில்:-இலங்கை தமிழர்களுக்கு அண்ணா உயிரோடு இருந்தபோதே, 29-1-1956 அன்று சிதம்பரம் நகரில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான்தான்.

திமுக ஆட்சி கலைப்பு...
ஈழத்தமிழர்களுக்காக தி.மு.க. தொடர்ந்து போராடி வந்ததோடு, ஆட்சிப்பொறுப்பிலே இருந்த போது 23-8-1990 அன்று சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறேன். அதை காரணமாக காட்டித்தான் 1991-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தி.மு.க. ஆட்சி இரண்டாவது முறையாக கலைக்கப்பட்டது.

ஜெயலலிதா சிறை சென்றது உண்டா?
23-4-2008 அன்று தமிழக சட்டப்பேரவையில் இலங்கைத்தமிழர்களுக்காக ஒரு தீர்மானத்தை நான் முன்மொழிந்து நிறைவேற்றிட செய்தேன். 12-11-2008 அன்று பேரவையில் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினோம். என்னை கேள்வி கேட்ட முதலமைச்சரிடம் நான் ஒரு கேள்வியை திருப்பிக்கேட்கிறேன். நீங்கள்(ஜெயலலிதா) இலங்கை தமிழர்களுக்காக எத்தனை முறை கைது செய்யப்பட்டு சிறையிலே இருந்தீர்கள்? இலங்கை தமிழர்களுக்காக நீங்கள் ஏற்றுக்கொண்ட இழப்பு என்ன? ஆட்சியை இழந்தீர்களா? அல்லது குறைந்தபட்சம் உங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையாவது ராஜினாமா செய்திருக்கிறீர்களா?.

குழந்தைக்கு கதை சொல்கிறாரா...?
கேள்வி:-மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, ‘‘யாரும் கவலைப்பட வேண்டாம், மின்வெட்டே இல்லாத மாநிலமாக விரைவில் தமிழகம் திகழும்'' என்று உறுதி கொடுத்திருக்கிறாரே?
பதில்:-கடந்த மூன்றாண்டு காலமாக, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதையேதான் திரும்ப திரும்பச்சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மின்வெட்டு பிரச்சினையில் இந்த ஆட்சியினர் தொடர்ந்து மூன்றாண்டு காலமாக கவலை வேண்டாம், மின்வெட்டே இல்லாத மாநிலமாக விரைவில் தமிழகம் ஆகும், மின்மிகை மாநிலமாக மாறும் என்றெல்லாம் குழந்தைக்கு நிலாவைப்பிடித்துத் தருவதாக கதை சொல்வதைப் போல கற்பனையான வாக்குறுதிகளைக்கொடுத்து, தமிழ் மக்களை ஏமாற்றியே ஆட்சிக்காலத்தைக் கடத்திவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் திறமைசாலிகள்....
தமிழ்நாட்டு மக்கள் திறமைசாலிகள், இவருடைய பொய்க்கும், பித்தலாட்டத்திற்கும் இனியும் ஏமாறமாட்டார்கள் என இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications