விடுதலைக்கு பின் முதல் பேட்டி.. நல்லவன் வாழனும் என்பதே நீதி.. குறளை மேற்கோள்காட்டி பேசிய பேரறிவாளன்
ஜோலார்பேட்டை: நல்லவர்கள் வாழ்வதும் கெட்டவர்கள் வீழ்வதும் என்பதே இயற்கையின் நியதி என பேரறிவாளன் முதல்முறையாக தனது விடுதலைக்கு பிறகு பேட்டி அளித்தார்.
Recommended Video
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனையையும் தாண்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின்படி இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பேரறிவாளனை சட்டவிதி எண் 142 இன் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

கொண்டாட்டம்
பேரறிவாளன் இருக்கும் ஜோலார்பேட்டை வீட்டில் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. அவரது வீடு இருக்கும் சாலையில் உணர்ச்சி பெருக்காக இருக்கிறது. இந்த நிலையில் பேரறிவாளன் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அவர் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார்.

அவர் பேசுகையில்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
இந்த குறளின் அர்த்தம் கெட்டவன் சிறப்பாக வாழ்வது, நல்லவர்கள் வீழ்ந்து போவது என்பது இது இயற்கையின் நியதி அல்ல. நான் விடுதலைக்காக எனது தாய் பல அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் சந்தித்துள்ளார். செங்கொடியின் உயிர்த்தியாகம்தான் மக்கள் மத்தியில் ஆதரவு அலையை பெருக்கியது.

புத்தகம்
மார்க்சிம் கார்கியின் தாய் புத்தகத்தை 4 முறை படித்துள்ளேன். அந்த தாயுடன் என் தாயை ஒப்பிட்டு பார்த்தேன். உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் வீட்டுக்கு பிள்ளையாக என்னை கருதி எனது விடுதலைக்காக குரல் கொடுத்தனர். 31 ஆண்டு சட்டப் போராட்டத்தின் போது ஒவ்வொரு முறையும் நான் விழும்போது என் தாயை பார்க்க அஞ்சுவேன்.

விடுதலை
பெற்றோர் வயதான காலத்தில் இத்தனை கஷ்டப்படுத்துகிறோமே என எண்ணுவேன். எனது தாய், தந்தை உயிருடன் இருக்கும் போதே விடுதலை ஆக வேண்டும் என நினைத்தேன். எனது சகோதரிகள், அவர்களது கணவர், தந்தை உள்ளிட்டோர் விடுதலைக்கு மிகவும் முக்கியமாக இருந்தனர். இயற்கை காற்றை சுவாசிக்க போகிறேன் என்றார் பேரறிவாளன்.












Click it and Unblock the Notifications