பேரறிவாளன் தந்தை குயில்தாசன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி
பேரறிவாளன் தந்தை குயில்தாசன் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பேரறிவாளன் தந்தை குயில்தாசன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தந்தையின் உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தார்.
அவரது கோரிக்கையைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, நிபந்தனையுடன் கடந்த ஜூலை மாதம் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுவித்தது. இதையடுத்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டார் பேரறிவாளன்.
இதனிடையே, தந்தை குயில்தாசனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், பரோலை நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்கு பேரறிவாளன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கியது.
இந்த நிலையில், உடல்நிலைக் குறைவால் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகம், ஆஸ்துமா, நரம்புகள் உள்ளிட்ட பிரச்னைகளால் குயில்தாசன் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லாததால், ஒரு வாரம் சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். குயில்தாசனுடன் அவரின் உறவினர்கள் மட்டுமே தங்கியிருந்தனர்.
பேரறிவாளனுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது தயார் அற்புதம்மாள், ஜோலார்பேட்டை வீட்டில் தங்கியிருந்து கவனித்து வந்தார்.
இந்த நிலையில் குயில்தாசன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.