என் மகனின் விடுதலைக்காக காத்திருக்கின்றோம் - பேரறிவாளனின் தாயார் பேட்டி
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மகனுக்கு விடுதலை கிடைக்காத வலி இன்னும் நெஞ்சை விட்டு அகல வில்லை. அவர் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ‘'ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் கடந்த 24 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர்.

இவர்களை விடுவிக்க முடிவு செய்து தமிழக முதல்வர் நடவடிக்கையில் இறங்கிருப்பதை மனதார வரவேற்கிறேன். அவருக்கு நன்றி கூறி கொள்கிறேன். இதற்காக தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு கடிதமும் எழுதி உள்ளது எங்களுக்கு நம்பிக்கையை தருகிறது. தனிப்பட்ட முறையில் முதல்வர் எனக்கு ஆறுதல் சொன்னார். தற்போது மத்திய அரசுடன் சுமூக உறவுடன் இருப்பதால் முதல்வர் திடீரென்று விடுதலை என்ற முடிவை எடுத்திருப்பது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது.
நோய்வாய்ப்பட்ட பேரறிவாளனின் தந்தையை பார்க்க, பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்று தான் கோரியிருந்தோம். ஆனால் முதல்வர் விடுதலையே செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதை மிகுந்த மனநிறைவை தருகிறது. இதனை வரவேற்கிறோம். முதலில் விடுதலை என்று அறிவித்துவிட்டு ஒரு சிலர் எதிர்த்ததால் என் மகனின் விடுதலை தள்ளிப்போனது. அதில் எங்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. அந்த வலி இன்னும் எங்களை விட்டு அகலவில்லை. இந்தநிலையில் முதலமைச்சரின் அறிவிப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
சிறைச்சாலை என்னுடைய மகனை நோயாளியாக தான் விடுவிக்க உள்ளது. யாரோ செய்ததை இவர்கள் செய்ததாக கருதி 25 ஆண்டுகள் அப்பாவிகளான இவர்களை சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இவர்களை தண்டிப்பதால் என்ன ஆகிவிட போகிறது. இழந்தது, இழந்தது தான். இதேபோன்று அனைத்து வழக்குகளையும் பார்த்திருக்க வேண்டும். ஆனால் என்னுடைய மகனுக்கு இப்படி ஒரு தண்டனை என்பதை ஏற்க முடியவில்லை.
சிறையிலும் அவ்வளவு நன்னடத்தையாக என் மகன் நடந்துள்ளான். என்னுடைய கணவர் நோய்வாய்பட்டு இருப்பதை காண பேரறிவாளன் என்று எங்கள் வீட்டுக்கு வருவான் என்று ஏங்கி கொண்டு இருக்கிறோம். விரைவில் தமிழக அரசு எங்களுக்கு சந்தோஷமான செய்தியை அளிக்க வேண்டும்''என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications