நவம்பர் 26... தந்தை பெரியாரின் ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்ட பிரிவுகள் எரிப்பு போராட்ட நாள்!
ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சாசன பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் நடத்திய நாள் நவம்பர் 26, 1957.
சென்னை: 1957-ம் ஆண்டு இதே நவம்பர் 26-ம் நாள்... ஜாதியை பாதுகாக்கிற அரசியல் சாசனத்தின் பிரிவுகளை எரித்து தந்தை பெரியார் நடத்திய மாபெரும் மக்கள் கிளர்ச்சி போராட்டத்தால் இந்தியாவே அதிர்ந்தது வரலாறு.
தந்தை பெரியார் 1926-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது முதலே ஜாதி ஒழிப்புக்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என இயக்கங்களின் பெயர் மாறினாலும் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு, திராவிடர் இன விடுதலை உள்ளிட்ட அடிப்படை கொள்கைகள் தொடர்ந்தன.

இதன் உச்சமாகத்தான் ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சாசன பிரிவுகள் 13,25,26, 372 ஆகியவற்றை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தார். போராடத்துக்கு முன்னதாக தமிழகம் முழுவதும் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன.
26.11.1957-ல் நடைபெற்ற இப்போராட்டத்தில் 10,000-க்கும் அதிகமானோர் பங்கேற்று இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவுகளை தீயிட்டு எரித்தனர். சுதந்திர இந்தியாவிலேயே அரசியல் சாசனத்தை தீயிட்டு எரித்த முதலாவது போராட்டம் இது.
இதில் 3,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், சிறுவர்- சிறுமியர் என பலரும் அடங்கும். காலையில் கைது மாலையில் விடுதலை என்கிற போராட்டம் அல்ல..
பலருக்கும் 3 மாதம் முதல் 3 ஆண்டுகாலம் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை கொட்டடியிலேயே மாண்டு போயினர் பலர்.












Click it and Unblock the Notifications