தமிழிசை, ஹெச்.ராஜா மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி: ஒருவர் கைது; 3 பேர் தப்பியோட்டம் !
சென்னை: சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பாஜகவினரும், இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, உள்பட 500 பேரை போலீசார் கைது செய்து வேப்பேரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபம், சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் வேப்பேரியில் உள்ள மண்டபத்தில் இருந்த பாஜகவினர் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீச முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவரை பாஜகவினர் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் பெயர் முகமது மீரான் என்பது தெரியவந்தது. மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
எச்.ராஜா, தமிழிசையை குறிவைத்து தாக்குதல் நடத்த வந்ததாக கூறி பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஈவிகேஎஸ் சம்பத் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. இதையடுத்து போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.