சென்னையில் ஆந்திரா வங்கி மீது பெட்ரோல் குண்டுவீச்சு
சென்னை: சென்னை டி.பி. சத்திரத்தில் உள்ள ஆந்திரா வங்கி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் அம்மாநில போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் ஆந்திர பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை டி.பி. சத்திரத்தில் உள்ள ஆந்திரா வங்கி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வங்கியின் முன் பக்கம் சேதம் அடைந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆந்திரா என்கவுன்ட்டர் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் வியாழக்கிழமை வலியுறுத்தினர்.
அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
ஆந்திரா அரசு கேட்டுக் கொண்டால் தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும். ஆந்திரா அரசு கோரிக்கை விடுக்காததால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.