தமிழகத்தில்தான் பெட்ரோல், டீசல் விலை கம்மி.. அதென்ன எடப்பாடியாரே இப்படி சொல்லிட்டீங்க!
தமிழகத்தில்தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி விகிதத்தை தமிழக அரசு அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
தமிழக அரசு பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாகவும் டீசல் மீதான வாட் வரி 21.4 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தியது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.78 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.70 ஆகவும் உயர்ந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ரூ74.47 ஆகவும் டீசல் விலை லிட்டர் ரூ.63.96 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் இந்த விலை உயர்வு அறிவிப்பிற்கு பொதுமக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உயர்த்தப்பட்ட வாட் வரியை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளன. மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் பொதுமக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி விதிப்பை திருப்பப் பெற முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது என்று பழனிசாமி கூறியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த பதில் தமிழக மக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.