மனித உரிமை மீறல்களைக் கண்டித்து போராட்டம்- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது
சென்னை: மனித உரிமை மீறல்களை கண்டித்து சென்னை மற்றும் மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு சிறை நிரப்பும் போராட்டத்தை இன்று நடத்தியது.
தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும், அநீதிகளைக் கண்டித்தும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், கருத்தரங்குகள், நோட்டீஸ் விநியோகம் மூலம் மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்தியது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா .
இதன் நிறைவாக இன்று அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், மதுரையில் ரயில்வே சந்திப்பு அருகிலும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தியது.

இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பந்த், வன்முறைகள், கொலைகள், முஸ்லிம் பகுதிகளில் தேடுதல் வேட்டை, வெடி பொருட்கள் பறிமுதல், தீவிரவாதிகள் கைது, கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் போன்ற பீதிகளால் முஸ்லிம்களை பொதுமக்கள் மத்தியில், குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது.
வீண்பழியால் ஏற்படும் மனக்காயங்கள், இழக்கும் குடும்ப உறவுகள், தனிமைபடுத்தப்படும் சமூக வாழ்க்கை, சின்னா பின்னமாக்கப்படும் சிறு குழந்தைகள், இளஞ்சிறார்களின் எதிர்கால வாழ்க்கை உள்ளிட்ட ஏராளமான இன்னல்களால் பொது சமூகத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படுகின்றது.
பெங்களூர், கோவை மற்றும் மதுரை குண்டுவெடிப்பை காரணம் காட்டி தமிழக காவல்துறை மற்றும் கர்நாடக காவல்துறையுடன் இணைந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் கைது செய்கின்றது.
எனவே, இது போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் வகையில், சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், மதுரையில் ரயில்வே சந்திப்பு அருகிலும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தி வருகின்றோம்.
மேலும், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வட மாநிலங்களில் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டமான, கறுப்புச் சட்டத்தை தமிழகத்திலும் காவல்துறை பிரயோகிக்க கூடாது.
வடமாநிலங்களில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் காவல்துறையின் சிறப்பு பிரிவும், மத்திய உளவுத்துறையினரும் இணைந்து பொய்வழக்கு புணைந்து கைது செய்தார்கள்.

பின்பு குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விடுதலை செய்தது. ஆனால் சட்டவிரோத காவல், உடல் மற்றும் மனரீதியான சித்ரவதைகள், சிறைவாசம், தீவிரவாதி என்ற அடையாளம், குடும்பம் மற்றும் சமூக வாழ்வில் அவர்களை தனிமைப்படுத்தி உள்ளது. இவர்களிடம் மன்னிப்பும் தெரிவிக்கப்படவில்லை. மறுவாழ்வும் வழங்கப்படவில்லை.
எனவே, தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து செயல்படுத்தப்படும் அரசு இயந்திரத்தின் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து இந்த போராட்டத்தை நடத்துவதாகத் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications