சசியை கைது செய்ய ஜெ உடலை பரிசோதனை செய்யத் தேவையில்லை... சூழ்நிலை போதும்!- பிஎச் பாண்டியன்
சென்னை: மறைந்த முதல்வர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இந்த மரணத்துக்குக் காரணமான சசிகலா உள்ளிட்டவர்களைத் தண்டிக்க, ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுக்க வேண்டியதில்லை. சூழ்நிலையே போதும், என்கிறார் முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, தொடர்ந்து அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்களால் எழுப்பப்பட்டு வந்தது.
ஆனால் யாரும் எந்த பதிலும் சொல்ல முன்வரவில்லை. குறைந்தபட்சம் ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் ஒரு புகைப்படம் அல்லது வீடியோ கூட வெளியிடப்படவில்லை.
2 மாதங்களுக்குப் பிறகு, ஜெயலலிதாவின் முதல்வர் நாற்காலியில் சசிகலா அமரவிருக்கும் சூழலில், அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைப் பற்றி விளக்குவதாகக் கூறி ஒரு பிரஸ் மீட் நாடகத்தை அரங்கேற்றினார்கள்.
அதை மக்கள் இம்மியளவும் நம்பாத நிலையில், இன்று ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள மர்மங்களை கிளறியுள்ளனர் முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன்.
இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிஎச் பாண்டியன் கூறுகையில், "முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் சொன்னார், 'தேவைப்பட்டால் ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்து, அவர் மரணத்தில் உள்ள சந்தேகத்தை தெளிவுப்படுத்துவோம்,' என்றார்.
என்னைப் பொறுத்தவரை அதற்கு அவசியமில்லை. ஜெயலலிதாவின் உடலை தோண்டிப் பரிசோதனை செய்யத் தேவையில்லை. சூழ்நிலையே போதும். அவர் மரணத்துக்குக் காரணம் யார் என்பதைத் தெரிந்து கொள்ள. ஜெயலலிதா வீட்டில் மயங்கி விழுந்த போது உடனிருந்தவர்கள் யார் யார்? முழுக்க உடனிருந்தது யார்? வீட்டில் மயங்கி விழுந்தபோது இருந்த நிலை என்ன? இவற்றையெல்லாம் ஒரு நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும். விசாரித்து சசிகலா உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்க முடியும். இதற்கு சட்ட உதாரணம் உள்ளது," என்றார்.
Former Speaker of Tamil Nadu Assembly, PH Pandian has accused Sasikala for the death of late CM Jayalalithaa.