போயஸ் தோட்டத்தில் தாக்கப்பட்டு காயமடைந்தார் ஜெ.. பி.எச். பாண்டியன் பகீர்!
போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டார் காயமான நிலையிலேயே அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக இன்று பரபரப்பு புகார் ஒன்றினை பி.ஹெச். பாண்டியன் கூறியுள்ளார். ஜெயலலிதாவை போயஸ்தோட்ட இல்லத்தில் கீழே தள்ளி விட்டனர் என்றும் அவர் காயமடைந்த நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்த போது நடந்தது என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்று கூறினார்.
தள்ளி விட்டார்கள்
செப்டம்பர் 22ஆம் தேதியன்று இரவு போயஸ் தோட்ட இல்லத்தில் அவரை கீழே தள்ளிவிட்டார்கள் என்று காயமடைந்த நிலையிலேயே அவர் அப்பல்லோவிற்கு கொண்டு வரப்பட்டார் என்றும் தெரிவித்தார்.
சிசிக்சை நிறுத்தம்
போயஸ்தோட்ட இல்லத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும், அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார். உயிர் போகும் தருவாயில் அவரது சிகிச்சையை நிறுத்த சொன்னது யார் என்றும் பி.ஹெச். பாண்டியன் கேள்வி எழுப்பினார். குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் நிறுத்தச் சொன்னார்களா என்றும் பி.எச் பாண்டியன் கேட்டார்.
தடுத்தது யார்?
2015ல் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தனர் ஆனால் அதை சிலர் தடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணமடைந்து 3 மாதங்கள் கடந்த நிலையில் அவரது சிகிச்சை மற்றும் மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்களை பி.ஹெச். பாண்டியன் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதி விசாரணை தேவை
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விரிவாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த பி.ஹெச் பாண்டியன் கூறியுள்ளார்.