தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி பொது நல வழக்கு.. மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி பொது நல வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை: தமிழகம் நீரில்லாமல் காய்ந்து கிடக்கிறது. பயிர்கள் கருகி இதுவரை 100 பேர் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிவகாசியைச் சேர்ந்த பாலகணேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டியது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, இந்த வழக்கு பிப்ரவரி மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க வேண்டும் என்று கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கும் அடுத்தமாதம் 14ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications