மதுரையில் கைப்பற்றபட்ட வெடிகுண்டு செயலிழப்பு!
மதுரை: மதுரையில் தமிழக விடுதலை படையைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் புதன்கிழமை செயலிழக்க செய்யப்பட்டது.
மதுரை உத்தங்குடியில் ரிலையன்ஸ் மார்க்கெட் நிறுவன வளாகத்தில் பிப்ரவரி11-ம் தேதி பைப் வெடிகுண்டை கைப்பற்றிய போலீஸார் திருவாதவூர் செல்லும் வழியிலுள்ள ஒரு குவாரிக்குள் வைத்து வெடிகுண்டை செயல் இழக்கச் செய்தனர்.

பின்னர் வெடிமருந்துகளைத் தடய அறிவியல் துறை சோதனைக்கு உட்படுத்தியதில், மத்திய அமைச்சர் நாராயணசாமி யின் வீட்டிலும், மதுரை ரிலையன்ஸ் வளாகத்திலும் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டும் ஒரே மாதிரியாகத் தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே தேசியப் புலனாய்வு அதிகாரிகள் மதுரையில் இதுபற்றி விசாரணை நடத்திச் சென்றனர்.
இதற்கிடையே ரிலையன்ஸ் வளாகத்தில் வெடிகுண்டு கிடந்த இடத்தில் தமிழர் விடுதலைப்படை என்றுஅச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் கிடந்தன. தமிழர்களுக்கு துரோகம் விளைவித்த மத்திய அரசைக் கண்டித்து வாசகங்கள் இருந்தன.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு ஒத்தக்கடை அருகே போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த சிவகங்கை மாவட்டம் பூவாச்சிபட்டியைச் சேர்ந்த திருச்செல்வம் (33) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்தவர் என்பதும், வெடிகுண்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதால் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது. இவர் அளித்த தகவலின்பேரில் சிவகங்கை மாவட்டம் பாவணக்கோட்டையைச் சேர்ந்த தங்கராஜ் (எ) தமிழரசன் (37), ஆத்தாங்குடியைச் சேர்ந்த கவியரசன் (29) ஆகியோரைக் கைது செய்தனர்.
மதுரை அவனியாபுரத்தில் மதுரை மாவட்ட போலீஸாரும், கியூ பிரிவு போலீஸாரும் சோதனை செய்த போது, 2 பைப் வைடிகுண்டுகள் மற்றும் வெடிபொருள்கள் தயாரிக்க பயன்படும் வெடிபொருள்கள், பவர்ஜெல் பாக்கெட்டுகள், கத்திகள் போன்றவை செவ்வாய்கிழமை காலை கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட திருச்செல்வம், தங்கராஜ் என்ற தமிழரசன், மற்றும் கவியரசு என்ற ராஜா மூவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே திருசெல்வம் தங்கியிருந்த வீட்டில் கைப்பற்றபட்ட 2 பைப் வெடிகுண்டை, மதுரை, மேலூர் மாவட்ட நீதிமன்ற அனுமதி பெற்று, வெடிகுண்டு நிபுணர் சிங்கம் தலைமையில் ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், ஊமச்சிக்குளம் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் இன்று மதியம் 3 மணியளவில் ஒத்தக்கடை அடுத்துள்ள புதுத்தாமரைபட்டி கல்குவாரியில் வைத்து செயலிழக்க செய்தனர்.












Click it and Unblock the Notifications