திமுக பஞ்சாயத்து தலைவர் ஜீப்பில் பைப் வெடிகுண்டு.. சேலத்தில் பரபரப்பு !
சேலம்: சேலம் மாவட்டம் அத்தனூர்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஜீப்பில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர் பட்டி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் திருமுருக வீரபாண்டியன். இவர் தனது பொலிரோ ஜீப்பை மரவனேரியில் உள்ள ஒரு வாட்டர் சர்வீஸ் மையத்தில் விட்டுள்ளார்.

சர்வீஸ் சென்டரில் வேலை செய்யும் ஆட்கள் தண்ணீர் அடித்து கழுவும் போது ஓட்டுனர் இருக்கைக்கு பக்கத்தில் உள்ள இருக்கையின் கீழே ஒரு பைப் வடிவிலான வெடிகுண்டு மற்றும் அதை வெடிக்க வைக்கும் பேட்டரி ஆகியவை இருந்ததை பார்த்து விட்டு அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படைப்பிரிவினர் உடனடியாக அங்கு வந்தனர். 8 பேர் கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் ஜீப்பில் இருந்து 2 அடி நீள பிளாஸ்டிக் பைப்பில் 12 வோல்ட் பேட்டரில் 2 கிலோ வெடிமருந்தை நிரப்பி வைத்திருந்த பைப் வெடிகுண்டை கண்டெடுத்து செயலிழக்கச் செய்தனர்.
சக்தி குறைவான பேட்டரியும், அதே நேரத்தில் வீரியம் குறைந்த அளவு வெடிமருந்தும் இருந்ததால் குண்டு வெடிப்பு நிகழவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
குண்டு வைத்து பல நாட்கள் ஆன நிலையில், அந்த குண்டு ரிமோட் மூலமோ, எஞ்சின் ஸ்டார்ட் செய்யும் போதோ, கதவை திறக்கும் போதோ வெடிக்க வைக்கும் விதத்தில் அமைக்காமால் மின்கசிவினால் நேரடியாக வெடிக்கும் வகையில் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை அறிந்த பொதுமக்கள் அந்த பகுதியில் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications