அடுத்த ஆப்பு... ரயில்வே மருத்துவமனைகளையும் மூட மத்திய அரசு முடிவு.. ஊழியர்கள் கடும் அதிர்ச்சி
ரயில்வே மருத்துவமனைகளையும் மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஈரோடு: ரயில்வே நிர்வாகம் பள்ளி கூடங்களை இழுத்து மூட முடிவு செய்துள்ள நிலையில் தற்போது மருத்துவமனைகளையும் மூட திட்டமிட்டுள்ளது ஊழியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்தியா முழுவதும் 125 ரயில்வே மருத்துவமனைகள் உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் 2597 மருத்துவ அதிகாரிகளும், சுமார் 54 ஆயிரம் இணை மருத்துவ ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

தென் இந்தியாவில் 11 ரயில்வே மருத்துவ மனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் 1232 படுக்கை வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பெரம்பூர், திருச்சி, மதுரை, அரக்கோணம், ஈரோடு ஆகிய இடங்களில் ரயில்வே மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளை மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
ரயில்வே துறையை சீரமைக்க அமைக்கப்பட்ட விவேக்தேவ்ராய குழுவின் சில பரிந்துரைகள் ஏற்கப்பட்டு விட்டன. மற்றவை விரைவில் அமலாக்கப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் ராஜன்கோ கெய்ன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு பல்லாயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்னக ரயில்வேயின் கீழ் தமிழகம் மற்றும் கேரளாவில் செயல்பட்டு வரும் 9 பள்ளிகளில் நடப்பாண்டு மாணவர்கள் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதுடன் 2019 மற்றும் 2020 ம் ஆண்டில் பள்ளிகள் முழுமையாக மூடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரயில்வேதுறையின் இந்த நடவடிக்கைக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரவு பகல் பாராது பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பாதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பாஷா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications