இன்று உலக சுற்றுச்சூழல் தினம் – சென்னையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சாரம்
சென்னை: இன்று உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு சென்னையில் பசுமைத் தாயகம் சார்பில் பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது.
மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதனையடுத்து சுற்றுச்சூழல் தொடர்பான இப்பிரச்சாரம் சென்னை தி நகர் உஸ்மான் சாலை, ரங்கநாதன் சாலை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஏ.கே. மூர்த்தி தலைமையில் ஏராளமான பசுமைத் தாயகம் தொண்டர்கள், பாலித்தீன் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கோரி, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் அளித்து பிரச்சாரம் செய்தனர்.
மேலும், சுற்றுச்சூழல் தினமான இன்று அப்பகுதி பொதுமக்களும், கடைக்காரர்களும் பாலித்தீன் பைகள் பயன்பாட்டை குறைப்பதாக உறுதி அளித்தனர்.