நாகர்கோவில் ரயில் நிலையத்தில் என்ஜின் மோதியதில் பிளாட்பாரம் பெயர்ந்து விழுந்தது
நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் பிளாட்பாரம் மீது மோதியது. இதில் நல்லவேளையாக யாரும் காயம் அடையவில்லை.
குமரி மாவட்டத்தின் தலைமை ரயில் நிலையமாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் உள்ளது. அந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 4 பிளாட்பாரங்கள் உள்ளன. அதில் 1ஏ பிளாட்பாரத்தில் திருவனந்தபுரம் அல்லது அந்த வழியாக செல்லும் பயணிகள் ரயில்கள் நிற்கும்.
நேற்று மதியம் 12.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கோட்டயம் செல்லும் பயணிகள் ரயில் 1 ஏ பிளாட்பாரத்திற்கு வந்தது. தண்டவாளத்தின் கடைசி பகுதிக்கு முன்பு ரயிலை நிறுத்தி என்ஜினை கழற்றினர். அதை முன்பகுதியில் மாட்ட நகர்த்ப்பட்டது. அப்போது என்ஜின் வழக்கத்திற்கு மாறாக வேகமாக சென்றுள்ளது. டிரைவரால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில் ரயில் என்ஜின் தண்டவாளத்தின் தடுப்புக்கட்டையை தாண்டி பிளாட்பாரத்தில் மோதியது. இதில் பிளாட்பாரத்தின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது. என்ஜின் மோதியபோது பிளாட்பாரத்தில் பயணிகள் யாரும் இல்லை. பயணிகள் இருந்திருந்தால் காயம் அடைந்திருப்பார்கள்.
பிளாட்பாரம் மீது மோதியதில் என்ஜினின் ஒரு சக்கரத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அந்த என்ஜினை நகற்றிவிட்டு கோட்டயம் செல்ல இருந்த ரயிலில் வேறு என்ஜினை பொருத்தினார்கள். இதைத் தொடர்ந்து ரயில் உரிய நேரத்தில் கிளம்பிச் சென்றது.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தண்டவாள தடுப்பு கட்டை மீது ரயில் மோதியது இது 4வது முறை ஆகும்.