வைரவிழா கொண்டாட்டம்: கருணாநிதி தவிர அனைவரும் பங்கேற்கிறார்கள்!
ஜூன் 3ஆம் தேதி மாலை திமுக தலைவருக்கு வைர விழா நடத்தப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜூன் 3ஆம் தேதி மாலை திமுக தலைவருக்கு வைர விழா நடத்தப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி சட்டசபையில் எம்எல்ஏவாக அடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனை வைரவிழாவாக கொண்டாட அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
கருணாநிதியின் பிறந்த நாள் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளுடன் சேர்த்து வைரவிழாவை கொண்டாட முடிவு செய்த அக்கட்சியினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
ஜூன் 3ல் வைரவிழா
இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சென்னையில் என்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜூன் 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் வைரவிழா நடைபெறும் என தெரிவித்தார்.
ராகுல் பங்கேற்பு
இதில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்பார்கள் என அவர் கூறினார். இதேபோல் பீகார் முதல்வர் நிதீஷ்குமார், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.
லாலுவும் வருகிறார்
லாலுபிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோரும் கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்பார்கள் என அவர் கூறினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோரும் கலந்துகொள்வார்கள் என்றும் ஸ்டாலின் கூறினார்.
கருணாநிதி பங்கேற்க வாய்ப்பு குடிறவு
கருணாநிதி நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், தற்போதைய சூழ்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைவு என்றார். மருத்துவர்கள் அனுமதித்தால் கருணாநிதி பங்கேற்பார் என்றும் ஸ்டாலின் கூறினார்.