சவுதியில் தவிக்கும் தூத்துக்குடி பெண்: மீ்ட்கக் கோரி கலெக்டரிடம் தாய் மனு
தூத்துக்குடி: வீட்டு வேலைக்காக சவுதிக்கு அழைத்து செல்லப்பட்டு சரிவர சம்பளம் கிடைக்காததால் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கு தவித்து வருகிறார். இந்நிலையில் அவரை மீட்கக் கோரி கலெக்டரிடம் அவரது தாய் மனு கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மேட்டுபட்டியை சேர்ந்தவர் சண்முகவேல் மனைவி கணேசம்மாள். இவர் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மற்றும் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது மகள் தமிழ்செல்வி. திருமணமாகாத இவர் எங்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணாபுரம் 2வது தெருவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான பட்டுகனி மற்றும் அவரது தங்கை செல்வகனி ஆகியோர் எங்களிடம் வந்து மகளை சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தால் மாத சம்பளம் ரூ.20 ஆயிரம் வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்றனர்.
இதற்கு செலவு தொகையாக என்னிடம் ரூ.30 ஆயிரம் பெற்றுக் கொண்டனர். எனது மகள் சவுதி சென்ற 3 மாதத்தில் 3 முறை மட்டுமே என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது என்னிடம் 16 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். மேலும் பல விதமாக தொந்தரவு செய்கிறார்கள். மாத சம்பளமாக ரூ.1000 மட்டுமே கொடுக்கின்றனர்.
எப்படியாவது என்னை இந்தியாவுக்கு திரும்ப அழைத்துச் செல்லுங்கள் என அவர் கதறினார். இது குறித்து பட்டுகனி மற்றும் அவரது சகோதரி செல்வனியிடம் கேட்டபோது எங்களிடம் ரூ.75 ஆயிரம் தருமாறு கேட்கின்றனர். இதனால் கலெக்டர் இதில் தலையிட்டு சவுதியில் தவித்து வரும் எனது மகளை மீட்டுத் தருமாறு வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications