தயவு செய்து "தங்க மகன்" மாரியப்பன் தங்கவேலுவின் ஜாதியைத் தேடி அசிங்கப்படுத்திடாதீங்க மக்களே
சென்னை: பி.வி.சிந்து ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றபோது அவரது பயோ டேட்டாவைத் தேடியவர்களுக்கு மத்தியில் அவரது ஜாதியைப் பற்றித் தேடியவர்களும் கணிசமாக இருந்தது இந்தியர்களை அதிர வைத்தது.
ஜாதி வெறி மனப்பான்மை இந்தியர்களை எந்த அளவுக்கு ஆட்டிப்படைக்கிறது என்பதையே இது வெளிக்காட்டியது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
பாரா ஒலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் இதுவரை இந்தியா தங்கம் வென்றதே கிடையாது. அந்த வகையில் மாரியப்பன் தங்கவேலு புதிய வரலாறு படைத்து விட்டார்.
ஜாதியை தேடாதீர்கள்
பிரதமர் நரேந்திர மோடி மாரியப்பன் தங்கவேலுவைப் பாராட்டியுள்ளார். பரிசுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இணையதளத்திலும் மாரியப்பன் தங்கவேலு யார் என்ற தேடுதல் அதிகரித்துள்ளது. இங்குதான் நமக்கு இந்தப் பயம் வருகிறது. எங்கே பி.வி.சிந்துவின் ஜாதியைத் தேடி அவரை அவமதித்தார்களோ அதேபோல மாரியப்பன் தங்கவேலுவின் ஜாதியையும் தேடி அசிங்கப்படுத்தி விடாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வருகிறது.
குடிகாரனால் விபத்து
ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது மாரியப்பன் தங்கவேலுவின் இந்த சாதனை வெற்றி. இவரது கால் சாலை விபத்து ஒன்றில் துண்டிக்கப்பட்டது. அதுவும் கூட ஒரு குடிகார டிரைவர் ஏற்படுத்திய விபத்தால் கால் பறிபோனது.
இளைஞர்களின் ஊக்க சக்தி
ஆனாலும் மாரியப்பன் தங்கவேலு சற்றும் மனம் தளராமல் கடுமையாக பயிற்சி செய்து தன்னை தயார்படுத்திக் கொண்டு இன்று ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்து விட்டார். அத்தனை இளைஞர்களுக்கும் இவர் ஒரு ஆதர்ச ஊக்க சக்தியாக மாறி நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனையைப் பாராட்டுங்கள்
அன்பு மக்களே, மாரியப்பன் தங்கவேலுவின் சாதனையைப் பாராட்டுங்கள், அவர் குறித்த தகவல்களைத் தேடி அவர் எந்த அளவுக்கு கடுமையாக பாடுபட்டார் என்பதை அறிந்து உங்களுக்கு நீங்களே ஊக்கம் கொடுத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து ஜாதியை மட்டும் தேடிப் பார்த்து அவரால் நாட்டுக்கு ஏற்பட்ட பெருமையை சிறுமைப்படுத்தி விடாதீர்கள்.