தமிழகம், புதுவையில் நாளை பிளஸ்2 தேர்வு தொடக்கம்!

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 மாணவர்கள் எழுதுகின்றனர். 3 லட்சத்து 80 ஆயிரத்து 288 மாணவர்களும், 4 லட்சத்து 45 ஆயிரத்து 829 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.
பள்ளி மாணவர்களைத் தவிர 53 ஆயிரத்து 629 தனித்தேர்வர்கள் இந்த பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ளனர். தமிழ் வழியில் பயின்று 5 லட்சத்து 45 ஆயிரத்து 771 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 242 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவரின் புகைப்படம், பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட முகப்புச்சீட்டு விடைத்தாளுடன் இணைத்தே வழங்கப்படுகிறது.
தேர்வுப் பணிகளில் மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வைக் கண்காணிக்கும் பறக்கும் படையில் மட்டும் 4 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications