பிளஸ் 2 ஆல் பாஸ் போடுங்க ஐயா... கோரிக்கை வைத்த மாணவர்களுக்கு ஓபிஎஸ் கொடுத்த உறுதி
எங்களையும் ஆல்பாஸ் என்று அறிவிக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் பிளஸ் 2 மாணவர்கள் கோரிக்கை வைக்க முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
போடி: பிளஸ் 2 மாணவர்களையும் ஆல் பாஸ் போடுங்க ஐயா என்று மாணவர்கள் வைத்த கோரிக்கையை கேட்ட துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், முதல்வரிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று மாலை தனது தொகுதியில் உள்ள உப்பார்பட்டி, பாலகுருநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து சீலையம்பட்டியில் பிரச்சாரம் செய்தார் ஓபிஎஸ். அவருக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
சொன்னதை செய்வோம்
அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட ஓ.பன்னீர் செல்வம், நாங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்றார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று 10 லட்சம் பேர் சென்னை மெரினாவில் திரண்டனர். இதைத் தொடர்ந்து வீர விளையாட்டுக்கு அனுமதி தர வேண்டும் என்று பிரதமரிடம் நேரில் சென்று பேசி னேன். இதனால், ஜல்லிக் கட்டுக்கு அனுமதி கிடைத்தது.
வாசிங் மெசின்
உசிலம்பட்டி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பூ சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். அரசு கல்லூரி அமைக்கப்படும் என்று சொன்ன ஓபிஎஸ் பெண்கள், தாய்மார்களின் வேலை சுமையை குறைக்கும் வகையில் அனைத்துக் குடும்பங்களுக்கும் வாஷிங் மிஷின் வழங்குவோம் என்றார். குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்களை உறுதியாக வழங்குவோம் என்றும் கூறினார்.
நிதி உதவித்திட்டம்
திருமண நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். ரூ.12 ஆயிரம் கோடி விவசாயக்கடன் ஒரே அரசாணையில் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. சிறுபான்மையினரின் ஒரே பாதுகாப்பு அரண் அதிமுக, பாஜக அரசுகள்தான் என்றும் ஓபிஎஸ் பேசினார்.
கோரிக்கையை பரிசீலிப்போம்
அப்போது மாணவர்கள் ஐயா என்று அழைத்தனர். அதைக்கேட்ட ஓபிஎஸ் தனது பேச்சை நிறுத்தினார். 9,10,11ஆம் வகுப்பு போல எங்களையும் ஆல்பாஸ் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதைக்கேட்ட ஓபிஎஸ் சிரித்துக்கொண்டே, முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பெண்களைக் கவரும் பிரசாரம்
இன்று தேனி மாவட்டம் பழனி செட்டிப்பட்டியில் வாக்குசேகரித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது இயல்பான பேச்சினால் பெண்கள், வாக்காளர்களை கவர்ந்து வருகிறார். மகப்பேறு நிதி உதவித் திட்டம் அதிகரிப்பு, தாலிக்கு 8 கிராம் தங்கம், இலவச வாசிங் மெஷின் என அரசின் திட்டங்களை பேசி வாக்கு சேகரித்து வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.